Sunday, 1 June 2014

மொட்டை போடுவது எதற்காக?

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்து மூன்று வயதுக்குள் அவரவர் குலதெய்வ கோயிலில் முடிகாணிக்கை அதாவது மொட்டை போடும் பழக்கம் இன்றும் வழக்கமாகி பின்பற்றப்படுகிறது.

இந்த மொட்டை போடும் பழக்கம் எப்படி வந்தது? எதற்காக வந்தது?

மகா பாரதத்தில் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி ஓர் இரவில் தன் ஆசை குழந்தைகளோடு உறங்கிக்கொண்டிருக்கிறாள். அஸ்வத்தாமன் திரவுபதியின் வம்சத்தை அழித்தே தீருவேன் என்று ஆவேசம் கொண்டு திரிகிறான். அன்று பாண்டவர்கள் இல்லை.

இது தான் சமயம் என்று அஸ்வத்தாமன் திரவுபதியின் குழந்தைகளை கொன்று விட்டு ஓடிவிடுகிறான். இதை அறிந்த அர்ஜூனன் குழந்தைகளை கொன்றவனை தலைகொய்வேன் என்று சபதமிடுகிறான்.

தங்கள் குல குருவின் மகன் அஸ்வத்தாமன் தான் இந்த பாதக செயலை செய்திருப்பது அறிந்து அர்ஜூனன் அவன் தலையெடுக்க துடிக்கிறான்.

திரவுபதிஉடனே, குலகுருவின் மைந்தனை கொல்வது பாவம் என்று அவனை தடுக்கிறாள். எடுத்த சபதத்தை முடிக்காமல்அர்ஜூனன் ஓயமாட்டான் என்று அர்ஜூனன் அடம்பிடிக்கிறான். முடிவில் குழப்பம் தீர்த்து வைக்க கிருஷ்ணன்,"அர்ஜூனா, நீ அஸ்வத்தாமனின் தலையை கொய்வதற்கு பதில் தலையில் உள்ள முடியை எடுத்துவிடு. அதுவே அவனை கொன்றதற்கு சமம்' என்று உபாயம் சொன்னார்.

அப்படியே அர்ஜூனனும் செய்கிறான். இதிலிருந்து தான் உயிருக்கு பதில் மயிர் கொடுக்கும் சம்பிரதாயம் வந்தது.

அடுத்ததாக, அந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவியும் அவனோடு தீயில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. காலமாற்றத்தில் கணவன் இறந்துவிட்டால் அவனோடு உடன்கட்டை ஏறி உயிர்துறப்பதற்கு பதிலாக, கணவனை பறிக்கொடுத்த மனைவி உயிருக்கு பதிலாக மயிரைக்கொடுத்து மொட்டையிட்டுக்கொண்டாள்.

அதிலிருந்து தான் விதவைகள் மொட்டை போடும் பழக்கம் தொடர்ந்தது. இன்னொரு வகையினரும் மொட்டைபோடுவர். அவர்கள் துறவிகள். துறவு என்பது மறுபிறவி எடுப்பதாகும். அதனால்தான் எடுத்தப்பிறவி உயிரை விட்டதாக கருதி முடியை மழித்துக்கொள்கின்றனர்.புதிய நாமம் சூட்டிக்கொள்கின்றனர்.

மேற்சொன்ன காரணம் கருதிய செயல்களுக்காக மொட்டை போட்ட பழக்கத்தை இன்று நம்மவர்கள் இறைவனிடம்,"இது நடந்துவிட்டால் மொட்டை போடுகிறேன்!' என்று பிரார்த்தனை செய்து அவர்கள் எண்ணியது நடந்ததும், பிரார்த்தனை ஈடேறியதற்கு இறைவனுக்கு மொட்டை போடுகின்றனர்.

0 komentar:

Post a Comment