இன்றைய யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியை நாம் பெருமளவில் நம்பினாலும்,
முன்னோர் அறிவுரைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், நமக்கு
பேரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதற்கு, சமீபத்திய உதாரணம் ஜப்பான்.
ஆம். உலகில் முதியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், நாட்டின் வடகிழக்குப் பகுதி
கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் வடகிழக்கில்
உள்ளது மியாகோ நகரம். இதை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில், பல
நூற்றாண்டுகளாக, சுனாமி தாக்குதல் ஏற்படுவது வழக்கம்.
இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில், பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே, அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள்
நிறுவப்பட்டுள்ளன.
அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி
மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு உயரங்களில்,
வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில், "இங்கு சுனாமி பாதிப்பு உண்டு,
நிலநடுக்கம் வந்தால், சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு' என்றும்,
"உயர்ந்த பகுதியில் வசிப்பதே, அமைதியான வாழ்வுக்கு உகந்தது, கல்வெட்டு
அமைந்துள்ள இடத்தை தாண்டி, குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து
நேரிடும்' என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதுபோல், எந்தெந்த பகுதியில்
சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எந்த
பகுதியில் வசித்தால், பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி
குறிப்பிடவில்லை.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன் யூது கிம்யூரா
கூறுகையில், "இந்த கல்வெட்டுகள் பற்றி நாங்கள் பாடங்களில் படித்துள்ளோம்.
இவை 600 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பகுதி சிறுவர்கள் அனைவருக்கும் இது
பற்றி தெரியும்' என்றான். அதே பகுதியில் வசிக்கும் ஐசாமு என்பவர்
கூறும்போது, "கடந்த 1896ம் ஆண்டு, பெரும் சுனாமி தாக்கியதை தொடர்ந்து,
எங்கள் முன்னோர், மேட்டுப் பகுதியில் குடியேறினர். நாங்களும் அவர்கள்
வழியையே பின்பற்றுகிறோம். என்றாலும், கல்வெட்டில் கூறியுள்ளதையும் மீறி,
இங்குள்ள சிகெய் கடற்பகுதியில் ஏராளமான பள்ளி மற்றும் குடியிருப்பு
கட்டடங்கள் நிறுவப்பட்டன.
அனைத்தும் தற்போது தரைமட்டமாகி, ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் உயிரிழந்தது தான் மிச்சம். கல்வெட்டு வாசகங்கள் குறித்து
யாரும் கவலைப்படுவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும்
புதுப்புது கட்டடங்கள் இப்பகுதியில் நிறுவப்படும்' என்றார்.
0 komentar:
Post a Comment